குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, February 10, 2017

எப்பொழுதும் எந்த நொடியும் சந்தோஷமாக வாழ்வது எப்படி?

போன் வருகிறது. பிள்ளை கீழே விழுந்து விட்டான். அடிபட்டு விட்டது என்கிறது அது. மனசுக்குள் திடுமென்று பயம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. எண்ணங்கள் அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்று அலைபாய மனதுக்குள் பாரம் அடுத்து அடுத்து ஏற்றப்பட்டுக் கொண்டே முடிவில் பெரும் துன்பகரமனதாக வேதனையில் விழுந்து வெம்மி விடும். பையனை நேரில் பார்க்கும் வரை வேதனையில் மனது வெந்து சாகும். அவனை நேரில் பார்த்தால் சின்ன அடி தான் என்றவுடன் மனசு லேசாகி விடும். அவ்வளவு நேரம் துயரப்பட்ட மனசு பட்டென்று லேசாகி சந்தோஷமாகி விடும். காரணம் அறியாமல் உண்மை தெரியாமல் மனது தனக்குள்ளேயே தவறான முடிவு எடுத்து துயரப்பட ஆரம்பித்து விடும். 

மனம் எப்போதுமே உண்மையை உணர்ந்து கொள்ளாது. மனதுக்கு முதல் எஜமான் உணர்ச்சிகள் தான். உணர்ச்சியின் பிடியில் சிக்கிய மனம் முழு உடலையும் ஆட்டுவிக்கிறது. கோபம் கொள்ளச் செய்கிறது. அழச் செய்கிறது. உண்மையை மறைத்து விடுகிறது. இறந்தகாலத்துக்குச் சென்று எதிர்காலத்துக்குச் சென்று இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி துயரத்தில் ஆழ்த்தி விடுகிறது.

இறந்த காலமும் இல்லை
எதிர்காலமும் இல்லை
இந்த இரு இல்லாமைகளுக்கிடையில்தான் மனம்
இருக்கிறது
அதனால் தான் துன்ப துயரங்கள்

மனதால் வாழ்வது துயர வாழ்க்கை
வேதனை மிகுந்த நரகம்
மனமே நரகம் தான்

சட்டென இதை உணர்ந்தால்
புதிய வாசல் பிறக்கும்
அது நிகழ்வின் தீர்ப்பு
இயல்பின் திறப்பு இது.

இருக்கிற ஒரே காலம் நிகழ்காலம் மட்டுமே
இருப்பதே அதுதான்
அதில் நீ இரு, அப்போது நீ விடுதலையடைவாய்
அதில் வாழ்க, அதுவே பரவசம்!

நன்றி : ஓஷோ - ஒரு கோப்பை தேநீர் புத்தகத்திலிருந்து ஒரு கவிதை

நான் சொல்ல வந்தது இதுதான். எது நடந்தாலும் என்ன நடந்தாலும் நடந்ததை அழித்து விட்டு புதிதாக ஆரம்பிக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை. நடந்து விட்டது இனி என்ன செய்யலாம்? நடந்து விட்டதை நமக்கு சாதகமாக பிறருக்கு பாதகம் ஏற்படா வண்ணம் சரி செய்ய முடியுமா? என்று மட்டும் தான் சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தனை செய்ய ஆரம்பித்து விட்டால் வாழ்க்கையின் போக்கு நிச்சயமாக மாறிப்போய் விடும். தட்டுத்தடுமாறி இப்பாதைக்கு மாறி விடுங்கள். எதையும் எளிதாக வெற்றி கொள்ளலாம்.

ஏதேனும் புரியவில்லை என்றால் மெயில் அனுப்பவும். விவரித்து எழுதுகிறேன்.

1 comments:

Nagendra Bharathi said...

அருமை

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.