குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, April 16, 2018

குருசாமிகவுண்டருக்காக கருப்பசாமியின் கண்ணீர்

கடந்த வாரம் கோவையில் வெயில் உயிரினங்களை வறுத்தெடுத்தது. சூடு தாங்க முடியவில்லை. உடலெல்லாம் புசுக் புசுக்கென கட்டிகள் தோன்றின. லிட்டர் லிட்டராய் தண்ணீரைக் குடிக்க வேண்டியதாகி விட்டது. முன்பெல்லாம் இப்படி கோவை இருந்தது கிடையாது. வெயில் அடிக்கும், ஆனால் சுடாது. வர வர கோவை கொதிக்கிறது. காவிரியாலா அல்லது வெப்பச்சூடாலா என்று இனம் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அவனுக்குத் தீர்க்கவே முடியாத இடியாப்பச் சிக்கல்களை உருவாக்குவது உறவினர்கள் தான். வாழ்ந்தாலும் ஏசுவார்கள், தாழ்ந்தாலும் ஏசுவார்கள். ஆக அவர்களுக்கு குறை சொல்லித்தான் வழக்கம். தங்கத்தட்டில் வைத்து சாப்பாடு பரிமாறினாலும் தட்டு நெளிந்திருக்கிறதே என்றும் குறை சொல்லும் அளவுக்கு உள்ளுக்குள் வெம்மையில் வெம்பிக் கிடப்பதால் வாயில் வரும் வார்த்தைகள் வன்மத்துடன் வெளிவரும். இப்படியானவர்களால் தான் பல குடும்பங்களுக்குள் குத்து வெட்டு என்று கூட நடக்கிறது. பைசாவுக்கும் பிரயோஜனமல்லாத பிரச்சினைகள் கோர்ட்டு வரை வந்து நின்று கொண்டிருக்கும். ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரவர்களுக்கு மறந்து போன விஷயம் அவர்களின் மரணம். அது எப்போது வரும்? எப்படி வரும்? என்று தெரிந்து கொள்ளாமல் ஏதோ ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் வாழ்வது போல செம கெத்துக் காட்டிக் கொண்டிருப்பார்கள்.

விளாங்குறிச்சியில் எனக்குத் தெரிந்த, பழக்கமான ஒரு கவுண்டர் இருந்தார். அவர் ஒரு விவசாயி. எதார்த்தவாதி. தன் அப்பாவுடன் பிறந்த பெண்களுக்கு சொத்துக்களை பாகம் பிரித்துக் கொடுத்தவர். அந்தளவுக்கு தன்மையானவர். அதிர்ந்து பேசத் தெரியாதவர். சத்தம் போட்டுப் பேசிப் பார்த்ததில்லை. எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பார். பெரும்பாலும் தென்னைத் தோப்பில் களைகளுக்கு மருந்து அடித்துக் கொண்டும், தென்னை மட்டைகளை வெட்டிக் கொண்டும், தண்ணீர் பாய்ச்சிக் கொண்டும் இருப்பார். அவர் வீட்டுக்குச் சென்றால் வரவேற்று எளிமையாகப் பேசிக் கொண்டிருப்பார். அவர் மீது எனக்கு கொஞ்சம் பிரியம் சாஸ்தி. இறந்து போன எனது சித்தப்பா குருசாமி போலவே இருப்பார் அவர். அவரிடம் இதைச் சொல்லி இருக்கிறேன். எப்போது பார்த்தாலும் சிரித்து நலம் விசாரிப்பார்.

அவருக்கு ஆஞ்சியோ செய்திருப்பதாக செய்தி கிடைத்திட அவரைச் சந்திக்க வீட்டுக்குச் சென்றேன். என்னைப் பார்த்ததும் அருகில் நாற்காலியைத் தூக்கிப் போட்டு அமர்ந்து கொண்டு,”டாக்டர் இரண்டு மாசம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லி இருக்கிறார். அதுக்கப்புறம் வேலை செய்வேன்” என்றுச் சொல்லிச் சிரித்தார்.  அவரின் முகம் களையிழந்து கிடந்தது. மருத்துவமனையின் வாசமும், மருந்துகளின் தாக்கமும் அவரின் பொலிவைக் குறைந்திருந்தன. முகத்தில் அந்த வசீகரப் புன்னகை ஒளிந்து கொண்டது. அதற்குள் உறவினர்கள் வரிசைக் கட்டி நிற்க, அவரிடமிருந்து விடை பெற்றேன். நோயுடன் போராடுவது ஒரு பிரச்சினை என்றால், உறவினர்களுக்குப் பதில் சொல்வது மற்றொரு பிரச்சினை.

மூன்று நாட்களுக்கு முன்பு அவர் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் மனது இருப்புக் கொள்ளாமல் வீட்டுக்குச் சென்றேன். உறவுகளின் கூட்டமும், அக்கம் பக்கத்தார், பழக்க வழக்கங்கள் உள்ளோர், நண்பர்கள், வேலைக்காரர்கள் என கூட்டம் வர ஆரம்பித்தன. உறவுகள் அழுது கொண்டிருந்தனர். ஒரு சிலர் கைகளில் மாலைகளோடு வந்தார்கள். அவரின் மீது போட்டு, கும்பிட்டு விட்டு வந்து அமைதியாக உட்கார்ந்து கொண்டார்கள். சொல்லி வைத்தாற்போல அங்கு வந்திருந்த அனைவரின் முகங்களும் வீங்கி இருப்பதைப் போல தெரிந்தது. எனக்குள் வருத்தம் மண்டிக் கிடந்தது. அயர்ச்சி அடைந்தது உள்ளம். அழுகுரல்களின் ஒலி அவ்வப்போது மனதைக் கனக்கச் செய்து கொண்டிருந்தன. 

இந்த பூமி எத்தனையோ உயிர்களைத் தாங்கி இருக்கிறது. இன்னும் தாங்கிக் கொண்டிருக்கிறது. ஐம்பூதங்களின் கூட்டுக் கலவையான உடல் காற்றுப் போனவுடன் அழுகி விட ஆரம்பிக்கிறது. உடல் நாற்றம் வீசுவதற்குள் பூமிக்குள்ளோ அல்லது நெருப்பிலோ எரிக்கப்படுகிறது. அத்தனை ஆசைகளும், கோப தாபங்களும் காற்றுப் போன அடுத்த நொடியில் காணாமல் போய் விடுகின்றன. 

ஒரு சிலரைப் பார்த்திருக்கிறேன். படுக்கையில் உயிரோடும் உடம்போடும் போராடிக் கொண்டிருப்பார்கள். எழுந்து நடமாட முடியாது. கடைசிக் கட்டத்தில் இருப்பார்கள். ஆனாலும் உயிரை இழுத்துக் கொண்டு கிடப்பார்கள். உயிரின் மகிமை அது. உடம்பின் சுகம் அது. அவ்வளவு எளிதில் உயிர் உடம்பை விட்டு விட்டுப் போகாது. ஒரு சிலருக்கு மரணம் என்பது நொடியில் வலியின்றி, என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் வந்து விடும். இப்படியான மரணங்களை நல்ல சாவு என்பார்கள். கவுண்டருக்கும் நல்ல சாவுதான் வந்திருக்கிறது என்று பேசிக் கொண்டார்கள்.

அப்போது வயதான ஒருவர் வாயில் துண்டைப் பொத்தியபடி கண்களில் கண்ணீர் வழிய என்னருகில் வந்து நின்று கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தார். அவரின் கண்ணீர் என்னைப் படுத்தியது. அவரின் தோளைத்தொட்டு அருகில் அழைத்தேன். 

“என்னைத் தொடாதீர்கள்” என்றார் அவர்.

“ஏனய்யா?” என்றேன்.

”அரிஜன்!” என்றார்.

எனக்குள் எரிச்சல் மண்டியது. அவரின் வயது அவரின் எண்ண ஓட்டத்தைக் காட்டியது. அந்தக் காலத்து ஆட்கள் இப்படித்தான் இருப்பார்கள். அது அவரின் குற்றமல்ல, அவரின் பழக்கம். 

அவரை அருகில் அழைத்து, “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, ஏன் இப்படி அழுகின்றீர்கள்? கவுண்டரை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன்.

“பதினைந்து வயதிலிருந்து எனக்குத் தெரியும். அவர் வீட்டின் வேலைக்காரன் நான். வயதாகியதால் தான் என்னால் வர முடியவில்லை. அவர் எனக்குக் கொடுக்கும் மரியாதையும், அவரால் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையையும் நினைத்தேன் அழாமல் இருக்க முடியவில்லை” என்றுச் சொல்லி மீண்டும் அழுதார்.

அவரை அருகில் அழைத்து தட்டிக் கொடுத்து, “இதோ என் வீடு இருக்கிறது. கவுண்டர் இல்லைன்னா என்னா? நீங்கள் என் வீட்டுக்கு வாருங்கள், உங்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன்” என்றுச் சொல்லி ஆற்றுதல் படுத்தினேன். கொஞ்சம் சரியானார். 

இறந்து போன குருசாமிக் கவுண்டருக்காக அவரின் வேலைக்காரர் விட்ட அந்தக் கண்ணீர்த்துளிகளில் மறைந்து கிடக்கிறது அவர் வாழ்ந்து சென்ற வாழ்க்கை.

* * *
16/04/2018

Monday, April 9, 2018

காவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் வீட்டுக் கிணற்றில் பதினைந்தாவது அடியில் நீர் கிடக்கும். அக்கம் பக்கத்து வீட்டு ஆட்கள் குடிக்க கிணற்று நீருக்குத்தான் வருவார்கள். பூட்டைக்கயிறு அடிக்கடி அறுந்து போகும். ரப்பரில் வாங்கிப் போட்டோம். அது பூட்டையில் சிக்கிக் கொண்டு இழுக்க முடியாது. கயிறுதான் நீர் இறைக்க வசதியாக இருக்கும். மழைக்காலங்களில் கிணறு நிரம்பி வழியும். கிணற்று வாய்ப்புறமாக புற்கள் சேர்ந்த மண்ணை சேந்தி எடுத்து வரப்பிட்டு வைப்பார்கள்.

கோவை சிறுவாணி தண்ணீரெல்லாம் அந்தச் சுவைக்கு ஈடாகாது. ஒரே ஒரு கொதியில் சி.ஆர். அரிசி வெந்து சோற்று மணம் வீட்டை நிறைக்கும். ஆறுகளில் வற்றாது நீர் சென்று கொண்டிருக்கும். குளங்கள் நிரம்பி வழியும். இரண்டு போக சாகுபடி. குறுவையும், பெரும்போகமும் நடக்கும். எட்டு மாதங்கள் வேலை இருந்து கொண்டே இருக்கும். குருவை நெல் பெரும்போக சாகுபடி செலவுக்கு கை கொடுக்கும். மாடுகளுக்கு குருவை வைக்கோல் பஞ்சுபோல இருப்பதால் சீக்கிரமாக மென்று தின்று கொழுக்கும்.

இப்படியான நாட்களில் ஊரில் தண்ணீருக்காக அரசு ஆழ்துளைக்கிணறு தோண்டினார்கள். கிணறு வற்றிப்போனது. குடி தண்ணீருக்காக பைப்படிக்குச் செல்ல வேண்டிய சூழல். இது காலத்தின் கட்டாயம் என்றாலும் அந்தப் பைப்படி பல்வேறு சிக்கல்களை அக்கம் பக்கத்தாருடன் உருவாக்கியது. குடிக்க, குளிக்க, துவைக்க தண்ணீர் போதாமல் நல்ல உறவுகளாகத் தெரிந்தவர்களுடன் சண்டை சச்சரவுகள் உருவாகின. ஒரு குடம் அதிகம் பிடித்தால் எண்ணிக்கை பிரச்சினை வந்து விட உறவுகள் தண்ணீருக்காக சங்கடப்படத்தொடங்கின.

ஆழ்துளைக்கிணறுகளால் மரம், செடிகள் பட்டுப்போயின. மழை வளம் குறைய ஆரம்பித்தது. குருவைச் சாகுபடி தானாகவே நின்று போனது. ஆனால் பெரும் சாகுபடி ஒழுங்காக நடந்து கொண்டிருந்தது. காவிரியும் கை விரிக்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒரு குடம் தண்ணீர் அதிகம் பிடித்தாலே சண்டைக்குச் சென்றோம். பக்கத்து மாநிலத்துக்காரர்கள் டி.எம்.சிக்கணக்கில் தண்ணீர் திறந்து விட மறுத்தார்கள். அவர்கள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா? சாதாரண மனிதர்கள் தானே? வானத்துத்  தேவர்களுக்குள் கூட சண்டையும் சச்சரவுகளும் உண்டு என்கின்றன மதங்கள்.

நாடெங்கும் தண்ணீருக்கான பிரச்சினைகள் துவங்கின. இது வரலாறு. கடந்து வந்த நிகழ்வுகளைச் எந்த வெட்கமும், சங்கடமும், வருத்தமும் இல்லாமல் வரலாறு சொல்லும். ஆனால் வரலாற்றினை உருவாக்கும் காரணகர்த்தாக்கள் வரலாற்றில் தென்படுவதில்லை. அவர்கள் தான் வரலாற்றினை உருவாக்குகின்றார்கள். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று அறியாது அறியாமையில் சிக்கிக் கிடக்கிறோம். இதோ அவர்களின் நயவஞ்சக சூழ்ச்சிகள்.

விவசாயம் பொய்த்தது, தேவைகள் அதிகரித்தன. அப்போது இஞ்சினியர் படிப்புகள் மக்களின் முன்னே வைக்கப்பட்டது. படித்தவர்களுக்கு பல லகரங்கள் சம்பளங்கள் என்று காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. சாதாரண விவசாயி பொய்த்துப் போன நிலத்தை வைத்து என்ன செய்வது? வாரிசுகள் படிக்கவாவது பயன்படட்டுமே என நிலத்தை விற்க ஆரம்பித்தான். படித்த இரண்டாம் தலைமுறை வாரிசுகள் இப்போது வேலையின்றி நிர்கதியாக நிற்கின்றனர். சொத்துக்களை விற்று படித்தவர்கள் வாங்கும் சம்பளத்தில் இரண்டு செண்ட் பூமியை வாங்க முடியவில்லை. ஏக்கர் கணக்கில் வைத்திருந்தவர்களுக்கு வீட்டு மனையாக இரண்டு செண்ட் கிடைக்காமல் மூன்றாவது மாடியிலோ நான்காவது மாடியிலோ தொங்கிக் கொண்டிருக்கும் ஆகாய வீடுகளை தவணை முறையில் வாங்கி புளகாங்கிதமடைகின்றார்கள். அதை நாகரீகம் என்றுச் சொல்லி மனதை ஆற்றுப்படுத்துகின்றார்கள். அதுதான் சிறந்த வாழ்க்கை என்று அறம் பேசும் பத்திரிக்காக்கள் கூவுகின்றன.

இது மட்டுமா? இன்னொன்றும் இருக்கிறது.

ஆங்கிலேயன் நாட்டை பிடித்துக் கொண்ட போது, விவரமாக ஆங்கிலம் கற்றுக் கொண்ட ஜாதியொன்று அட்டையாக அவர்களிடம் ஒட்டிக் கொண்டது. எங்கு பணம் இருக்கோ அங்கு சென்று ஈசிக் கொண்டு உறிஞ்சுவதை வாடிக்கையாகக் கொண்ட கூட்டம் அது. கோவில்களை பிடித்துக் கொண்டது.  இந்தியாவெங்கும் அதிகாரத்தில் நீக்கமற நிறைத்தன அக்கூட்டம். அதில் ஒரு சிலரை வைத்துப் பக்தியை பரப்பியது. கோவிலுக்குள் கூட்டத்தை வர வைத்து வசூலித்துக் கொண்டது. 

குலதெய்வ வழிபாட்டினை விட்டு விட்டு, காசு கொடுக்கும் தெய்வமென்ற கோவிலுக்கு படையெடுத்து இருக்கும் கொஞ்ச நஞ்ச பொருளையும் இழக்க ஆரம்பித்தார்கள். குல தெய்வங்கள் காணாமல் போயின. ஊரெங்கும் கோவில்கள் முளைக்கத்துவங்கின. வசூலிக்க ஆரம்பித்தன. இதற்கிடையில் வேற்று மதங்கள் வேறு நுழைய மக்களுக்கு எதைத்தின்றால் பித்தம் தெளியும் எனப் புரியாது எல்லாவற்றையும் தின்னத் தொடங்கினார்கள்.

இது மட்டும் போதாது என கூத்தாடிகள் வேறு கூத்தாடினார்கள். கூத்தாடிப் பெண்களின் தொடைகளிலும், குண்டிகளிலும், முலைகளிலும் கலைகளை வளர்த்து தலைவர்கள் உருவாகினர். பெண்களின் ஆடை அவிழ்ப்புகளை கலை என்றார்கள். மறை பொருள் வெளிவரும் திகைப்பில் தேணுண்ட நரியாய் மக்கள் மாறிப்போயினர். மக்கள் திரைகளின் முன்னே கை நீட்டி, முறுக்கி, வாய்கோணி, தொண்டை வறண்ட காட்டுக்கத்தல் வசனங்களில் மூழ்கிக் கிடந்தனர். அரசியல் காமத்தோடு இயைந்து மக்களை மனமயக்கி ஆட்சித்தலைமையில் உட்கார்ந்தார்கள் தலைவர்கள்.  தங்கள் கோவணத்தைக் கூட அறியாமல் பிடுங்கிக் கொண்டிருக்கும் தலைவர்களின் வசீகரத்தில் மூழ்கிக் கிடந்தனர்.

காசிருந்தால் போதும், கடைத்தேறி விடலாமென்ற ஆவலில் படித்தார்கள் கிராமத்தார்களின் வாரிசுகள். அங்கேயும் தங்கள் கைவரிசையைக் காட்டி அட்டை போல உட்கார்ந்தார்கள் அந்த உறிஞ்சு கூட்டம். இப்போது ஒரு கூத்தாடி கிறிஸ்துவர்களையும், முஸ்லிம்களையும் எங்கள் ஜாதி என்கிறது. கொஞ்சமே கொஞ்சமாய் விழித்துக் கொண்டார்கள் என்பதால் உடம்பு முழுவதும் அக்னியாய் எரியும் அந்தக் கூட்டத்தாருக்கு பித்தம் அதிகமானதால் பல்வேறு சூழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றார்கள். 

காலத்தின் கோலம் மட்டுமல்ல ஒரு சில மனித குல நாசக்காரர்களின் வஞ்சக எண்ணித்திலே காசு பண்ணும் ஆசையினாலே இந்தியா அழிபடத்தொடங்கியது. இமயம் முதல் குமரி வரை குளிர் நீராலே குளிர்ந்திருந்த இந்தியாவும், அதன் மக்களும் ஒரு சில உயர் ஜாதி நாசக்காரர்களின் பண ஆசையினாலே பிரிபடத் தொடங்கினார்கள். அரசியலில் அவர்கள் போய் உட்கார்ந்தார்கள். பணமிருந்தால் மட்டுமே அதிகாரம் என்ற நிலைக்கு அரசியலைக் கொண்டு வந்தார்கள். ஏழைகள் அதிகாரத்தினருக்குச் செருப்புத் தொடைத்துப் போடும் வேலையைச் செய்ய வைத்தார்கள். அரசாங்கத்தில் ஊழல் பெருத்துப் போக வைத்தார்கள். நீதித்துறையிலும் கூட ஊழலைப் புகுத்தினார்கள். நீதிபதிகளை கேள்வி கேட்கக் கூடாது என்றார்கள். எல்லையற்ற அதிகாரம் அழிவுகளைச் செய்ய ஆரம்பித்து விட்டதை, ‘சட்டப்படி தான் எல்லாமும் நடக்கும்’ என்று வாய்ச்சொல்லில் சட்டம் படித்தார்கள். எதிர்த்தால் ஆண்டி இந்தியன் என்றார்கள். போராட்டங்களை தேசத்துரோகங்கள் என்றார்கள். 

இளைஞர்களை உடல் வலிமை தரும் விளையாட்டுக்களில் இருந்து பிரித்து ஏமாற்றினார்கள். அதுதான் வீரம் என்றார்கள். அதுதான் விளையாட்டு என்றார்கள். உடல் வலி குறைந்து போய் வெம்பிப்போன பிஞ்சுகளாய் மாறினர் இளைஞர்கள். 

கையிலிருக்கும் காசைக்கூட செல்லாது என்றார்கள். வங்கியில் போட்டால்  கைது செய்ய மாட்டோம் என்றார்கள். வங்கியில் பணத்தைப் போட்டால் மொத்தமாக திருடும் கூட்டத்தை வைத்து திருட வைத்து வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். வங்கிகள் மூழ்கிப் போகப்போகின்றன என்கிறார்கள். அதற்கு வரி, இதற்கு பிடித்தம் என்கிறார்கள். இனி என்ன ஆகுமோ தெரியாது எனக் கலங்கி நிற்கிறது பரிதாபகரமான இந்தியமக்கள் கூட்டம். இருக்கும் பணத்தை எல்லாமும், சொத்துக்களையும் பறிமுதல் செய். இந்தியனை ஏழையாக்கு, அதன் பின் அடிமையாக்கு என்கிற மந்திரம் ஜெயிக்க பல்வேறு சித்துக்களை செயல்படுத்துகிறது அந்தக் கூட்டம்.

இது ஒரு பக்கமிருந்தாலும் இன்னொரு கூட்டம் மொத்தமாகப் பறித்துக் கொண்டு விடுகிறது.

எல்லாவற்றுக்கும் ஆசைப்படு, ஆசைப்பட்டதை எல்லாம் என்னிடம் கொடுத்து விட்டு என்னுடன் அமர் என்கிறது ஒரு கூட்டம்.  அது யோகக்கலையினைக் கற்றுக் கொடுத்து உடல் வலிமை பெற வைக்கும் என்று கூறுகிறது. உடல் வலி இழந்து, நிர்கதியாய் நிற்போரை, மனமகிழ் கொள் என மொட்டை அடித்து புண்ணிய மாக்களாக ஆக்குகின்றார்கள். 

இதோ உங்களைக் காப்பாற்ற வந்து விட்டார் மகிமைமிக்கவர்கள் என்றார்கள். வங்கிக் கணக்குகளில் லட்சங்களை போடுவோம் என்றனர். நல்லாட்சி தருவோம் என்றார்கள். இதோ அவர்கள் தரும் நல்லாட்சிக்கு நற்சாட்சி கீழே

*We were taxed for earning money.*
*We are taxed for spending money.*
*We were taxed for hoarding money.*
*We are taxed for withdrawing money.*
*We are taxed for depositing money.*
*We are taxed for service money*
*We are taxed (cess)for education*
*We are taxed for Swatch Bharat*
*We are taxed for purchase*
*We are taxed for sales*
*We are taxed for manufacturing*
*We are taxed for public Utility*

_*Earning is a crime.*_

_*Saving is a crime.*_

_*Spending is a crime.*_

_*Donating to Political Parties is the only good act.*_


இதுதான் நல்லாட்சி. இருக்கும் பணத்தை எல்லாம் நாட்டுக்குக் கொடு என்கிறது அந்த நல்லாட்சி. நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் நீ நாசமாகப் போ என்கிறது அந்த ஆட்சி. நீ இருந்து என்ன புண்ணியம்? நாடு நன்றாக இருக்க வேண்டும் என்கிறது அந்த நல்லாட்சி. மக்கள் நன்றாக இருந்தால் நாடு நலம் பெறும் என்பதை தங்களுக்கு வசதியாக மாற்றிக் கொண்டு மூளைச்சலவை செய்தார்கள். புத்தி தெளிந்தோருக்கு பித்தனென்று பட்டமிட்டார்கள். அவர்களை தேசத்துரோகிகள் என்றார்கள்.

உடல் வலி இழந்து, உணவு விஷமாகிப் போனது. மருத்துவத்திற்குச் சென்றால் பணக்காரர்களுக்கு உடல் உறுப்புகளைத்தானம் கொடுக்க புதிதாக மூளைச்சாவு என்றுச் சொல்லி உறுப்பையும் அறுத்தெடுக்கும் அற்புதமான வைத்தியத்தை தர வைத்தார்கள்.

வடக்கே சாமி சிலைக்கே நாமே அர்ச்சிக்கலாம். தெற்கே என்றால் சம்பிரதாயம் குலைந்து போகும் என்று கூப்பாட்டுக் குரல் கேட்டு நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்குகின்றன. தீண்டாமை குற்றம் என்ற சட்டம் கோவிலுக்குள் செல்வது தீண்டாமை என்கிற போது கை பொத்தி மெய் மூடி நிற்கிற அதிசயத்தைப் பார்க்க வைத்தார்கள். கேள்வி கேட்போருக்கு மூளை இல்லை என்றார்கள். சாமி குத்தம் என்றார்கள். இந்த வரலாற்று சூழ்ச்சிக்காரர்களின் சூழ்ச்சிக்கு இரையாகியது மொத்த இந்தியாவும். அதில் முன்னணியில் இருப்போர் தமிழர்.

பொங்கிய புனல்கள் எல்லாம் வற்றிப் போயின. வற்றாத புனல்களை வற்ற வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பூமிக்குள் இருக்கும் தண்ணீரையும் உறிஞ்சி எடுத்து பாலைவனமாக்க பல்வேறு வசனங்களைப் பேசுகின்றார்கள். காவிரி ஆற்று நீரை அளவு குறைத்தார்கள். இருக்கும் நிலத்தடி நீருக்கும் நாட்டின் வளர்ச்சி என்கிற பெயரில் வேட்டு வைத்தார்கள். சுடுகாடாக்கி ஒரு சமூகத்தை அழித்துவிடும் அற்புத திட்டம் இதென்று காசுக்கு அடங்கும் கூட்டத்தாரை வைத்து நாட்டை வளமாக்கும் அற்புதங்கள் நிகழப்போகிறது எனக் கூப்பாடு போடுகின்றார்கள். பதவியில் இருப்போரின் பலவீனங்களால் பறிபோகிறது தமிழர் பூமி வளம். 

ஸ்ரீலங்காவில் மண்ணுக்குள் புதைந்து போன தமிழர்களின் கனவுகள் போல இற்றுப் போன பிணங்கள் நடமாடும் இடமாக மாறப்போகின்றன தமிழர்கள் வாழ்க்கை.

தமிழர்களும் தமிழும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு புதைக்கப்பட்ட வரலாறாகப் போகும் நிகழ்வுகள் நடந்து கொண்டேஇருக்கின்றன. தமிழர்கள் நடிகர்கள் தடவும் நடிகைகளின் தொடைகளின் வனப்பில் கனவுகளைக் கண்டுகொண்டு கிடக்கின்றார்கள். இன்று கிடைக்கும் காசில் டாசுமாக்கில் போதையேற்றி நடுச்சாலையில் உரண்டு கொண்டிருக்கிறது தமிழர் சாதி. 

மாடு பிடிக்கப் பொங்கிய கூட்டம் இன்று தண்ணீர் வளம் பொங்க போராடாது சோம்பிக் கிடக்கிறது. இருக்கும் காலம் வரை குடிக்க ரம் உண்டு என்கிறது ஒரு கூட்டம். கை தட்டி மகிழ்ந்து, ஆடும் முலைகளோடு சேர்ந்தாட கிரிக்கெட் எனும் விளையாட்டு இருக்கிறது என்று இளிக்கிறது ஒரு கூட்டம். கூட்டம் கூட்டமாக பிரிந்து கிடக்கும் தமிழர் சாதி சேர்ந்து விடக்கூடாது என்று கொக்கரிக்கிறது மற்றொரு கூட்டம். 

திரிந்த மனம் தெளிந்து நீர் எது கானல் எது என்ற விபரம் தெரிவதற்குள் காணாமல் போய் விடும் தமிழர் சாதி தற்போது காணாமல் போய்க் கொண்டிருக்கும் காவிரி போல. 

Wednesday, April 4, 2018

இப்படியும் சில ஜென்மங்கள்

திருவான்மியூரில் இருக்கும் திருமதி.ஜோதி அவர்கள் தெரு நாய்களுக்காக 12 வருடங்களாக உணவு கொடுத்து வருகிறார் என்ற செய்தியை விகடனில் ஆன்லைனில் படித்தேன். மனதுக்கு இதமாக இருந்தது. அந்தப் பெண்மணி நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென மனசு நெகிழ வேண்டிக் கொண்டேன். ஆனால் அதற்கு ஒரு ஆத்மா இப்படி ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறது. 


( நன்றி : விகடன் )

நாய்களை விட மனிதர்கள் எவ்வளவோ அக்கிரமங்களைச் செய்கின்றார்கள். அவர்களை எல்லாம் உணவிடாமல் கொன்று விடலாமா என்று இந்த அக்கப்போர் சொல்லுமா? எனத் தெரியவில்லை. இது ஆணா பெண்ணா என்று கூடத் தெரியவில்லை. மனிதப்பண்பு அற்ற இந்த கமெண்டுகளை எப்படித்தான் எழுதுகின்றார்களோ தெரியவில்லை. இப்படியும் ஒரு சில ஜீவன்கள் இந்தப் பூமியில் வாழ்கின்றன. என்ன செய்வது? 

அடுத்த நொடியில் மனித வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்தே பார்க்க முடிவதில்லை. நம்ம முன்னாள் முதலமைச்சர் அதற்கொரு உதாரணம். இப்படி பல்வேறு சம்பங்களை நாம் கடந்து வந்திருக்கும் வாழ்க்கையில் கண்டிருப்போம். இப்படியான நிலையில் நிரந்தரமில்லா வாழ்க்கையில் எதுதான் சாசுவதம் என்று புரிந்து கொள்வதற்குள் ஆயுளே முடிந்து போகின்றது. எல்லாம் புரிந்த பிறகு செய்ய முடியாது போய் விடுகிறது.

கோவையில் எனக்குத் தெரிந்த ஒரு நபர், நல்ல மனிதர் அவர். விவசாயி. படிக்கவில்லை. ஏகப்பட்ட சொத்துக்கள். மாதம் தோறும் கொட்டும் வாடகைப் பணம். பிரஷர் இல்லை, சர்க்கரை இல்லை. தினமும் எட்டு மணி நேரம் உழைப்பு. இன்று கே.எம்.சி.ஹெச்சில் ஆஞ்சியோ செய்யப்பட்டுக் கிடக்கிறார். நேற்றுக்கு முதல் நாள் பேசிக் கொண்டிருந்தார். இன்றைக்கு மருத்துவமனையில் கிடக்கிறார்.

எனக்கு உடம்பில் சில நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. இவ்வளவுக்கு அடியேன் சுத்த சைவம்.  முட்டை கூட எடுத்துக் கொள்வதில்லை. எண்ணைப் பலகாரங்கள், பால் பொருட்கள், கொழுப்பு சார்ந்த உணவுகளைத் தவிர்த்து விடுவேன். கால் வயிறுதான் உணவு எடுத்துக் கொள்வேன். இருப்பினும் அவ்வப்போது நோயின் பிடியில் சிக்கி விடுவேன். அடிக்கடி சளி பிடிக்கும். இந்த முறை மட்டும் தான் மருந்தே இல்லாமல் சரியானது. எளிமையான மருத்துவம் தான். ஆனால் இன்ஸ்டண்ட் உணவுகளை உண்ணும் இந்த உலகம் அதை ஏற்பதில்லை. இப்படியெல்லாம் வாழ்ந்து கடைசியில் உடம்பு என்ன இரும்பாகவா இருக்கப் போகின்றது? அழியத்தான் போகிறது. ஆனால் மருத்துவமனையில் சென்று படுக்கக் கூடாது என்று மனது ஆசைப்படுகிறது.

இதற்காக அக்குபிரஷரில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். கொஞ்சம் உடல் பருமனைக் குறைக்க, உணவு பழக்கத்தை சீராக்கவும் தொடர்ந்து சென்று வருகிறேன். அங்கு ஐ.டியில் பணிபுரியும் பல்வேறு பெண்களைச் சந்திக்கிறேன். ஒவ்வொரு பெண்களும் காரில் வருகின்றனர். லட்சங்களில் சம்பளம். வரும் போதே போனும் கையுமாகத்தான் வருகின்றனர். அடிக்கடி வரும் அழைப்புகளில், ‘சரி ஹெட், காலையில் வந்து விடுகிறேன்’ என்ற வார்த்தைகள் கேட்கும். ஐடிக்கணவர்கள் போனுடன் வாழ்க்கை நடத்துகின்றார்கள். அவர்களின் உடைகள் பல ஆயிரங்கள் இருக்கும். செம மாடர்ன் பெண்கள். அவர்களின் பின்னே அப்பெண்களின் அம்மாக்கள் கையில் குழந்தைகளுடன் சில நேரங்களில் வருவர். ஒரு சில பெண்கள் தங்கள் குழந்தைகளை (எக்ஸ்ட்ரா லக்கேஜ்கள்) அம்மாக்களிடம் கொடுத்து விட்டு பால் கவுச்சி அடிக்காமல் இருக்க டியோடரண்டுகளை அடித்துக் கொண்டு பால் கொடுப்பது அழகுக்கு ஆபத்து என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

லட்சங்களில் கார், ஆயிரங்களில் உடைகள் ஆனால் இளமை முழுவதும் சாஃப்ட்வேர் கம்பெனிக்கு அர்ப்பணிக்கின்றார்கள். அவர்கள் கொடுக்கும் லட்சங்களை முன்னே பின்னே பார்த்தறியாதவர்களுக்கு எது வாழ்க்கை என்று புரிபடவே இல்லை. பெரும்பாலான ஐடியில் வேலை செய்யும் பெண்களின் குழந்தைகள் நோயுடனே பிறக்கின்றன. அவர்களின்  நோயுக்கான சிகிச்சையை அவர்கள் செய்கின்றார்கள். நோஞ்சான் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவர்களின் அம்மாக்கள் சிகிச்சைக்கு வருகின்றார்கள். இந்தக் கொடுமைகளை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. பிள்ளைகளின் அழுகுரல்கள் கேட்கும் போது அது எனக்கு நரகத்தை விடக் கொடுமையானவையாகத் தோன்றுகிறது.

பணத்தின் முன்னே சலாமிடும் உலக மாந்தர்கள் இருக்கும் வரை இப்படியான அழுகுரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கும் போல. இரக்கத்துடன் நாய்களுக்கு உணவிடுபவரைக் கூட கிண்டல் செய்து, அதில் ஒரு கெட்ட எண்ணத்தைப் பதிவிடும் மாந்தர்கள் இந்த உலகில் இருக்கும் வரை தீமைகள் இருக்கத்தான் செய்யும். அந்தப் பின்னூட்டம் என்ன ஒரு அரக்கத்தனமான எண்ணம் என்பதைக் கவனியுங்கள். இவர்களும் நம்முடன் தான் வாழ்கின்றார்கள்.

Monday, April 2, 2018

பெண்மையின் தத்துவம் தியாகம்

அத்தினி, சித்தினி பதிவு என் மனைவிக்கு விருப்பம் இல்லாத காரணத்தாலும், ஆண்கள் கெட்டுப்போய் விடக்கூடாது என்பதாலும், சில பெண்களின் வாழ்க்கையில் சில பல பிரச்சினைகள் எழும் என்பதாலும் எழுதப்படவில்லை என்பதை மிகுந்த பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே மன்னித்தருள்க. அவங்களுக்கு பிடிக்கவில்லை எனில் அடியேன் மூச்சு கூட விடுவதில்லை. உண்மையாகத் தான் சொல்கிறேன். மூச்சுக்கூட விடமாட்டேன்.

என்னிடம் சொத்து இருக்கிறதா? உறவினர்கள் உள்ளனரா? பணம் சம்பாதிப்பாரா? என்றெல்லாம் அவர் யோசிக்கவே இல்லை. வருகிறாயா? என்றேன் வந்து விட்டார். எதிர்கால வாழ்க்கையின் போக்கு எனக்குப் புரியாதகாலம் அப்பருவம். மனித மனங்களில் மண்டிக்கிடக்கும் இருட்பகுதிகளை உணர்ந்து கொள்ளும் பக்குவம் இல்லாத பருவத்தில் இருந்தேன். சினிமா தான் வாழ்க்கை போலும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது எதார்த்தம் அல்ல என்று இருவரும் வாழ்க்கையில் இணைந்த பிறகு, என் முன்னே வந்து நின்றது என் வாழ்க்கையும் என் சூழலும்.

ஒரு உறவினர் வீட்டில் தங்கி இருந்த போது, ‘உங்கள் இருவருக்கும் சமைத்துப் போட காய்கறி இல்லை’ என்றார்கள். மறு நாள் அங்கிருந்து சென்று விட்டோம். மற்றொரு உறவினர் வீட்டில் இருந்த போது ’எப்போது நீங்கள் ஊருக்குப் போகப்போகின்றீர்கள்?’ என்று கேட்டார்கள். அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். இவ்வளவுக்கும் ஊரில் பெரும் சொத்துக்காரன் என்ற பெயர் எனக்குண்டு. அது என் அப்பன் வழி வந்த பெயர். அந்தச் சொத்துக்குச் சொந்தக்காரர் என் அப்பன்.

அவருக்கு நான் எந்த வித பிரதி பிரயோஜனும் செய்யவில்லை. என் சிறிய வயதில் மறைந்து போனார். அவர் என்னைப் பெற்றது முதல் ஒரு நாள் கூட ஒரு மிட்டாய் கூட வாங்கித் தரவில்லை. அதற்கு அவரும் நானும் காரணம் அல்ல. விதிதான் காரணம். இன்னுமொன்றைச் சொல்ல வேண்டும். நான் என் அப்பாவை, ‘அப்பா!” என்று அழைத்தது கூட இல்லை. எனக்கும் என் தகப்பனுக்குமான உறவு என்பது அவரின் இனிஷியல் என் பெயரின் முன்னால் இருக்கிறது என்பது மட்டும்தான். அவருக்கு பிள்ளையாகையால் கொள்ளி மட்டும் போட்டேன். முடி எடுத்து காரியங்கள் செய்தேன். ராமேஸ்வரம் சென்று பித்ரு கடன் செய்தும் வருகிறேன்.

எனக்கு எல்லாமுமாக இருந்தது என் அம்மாவும், அக்காக்களும், மாமாவும், தாத்தாவும் தான். எனக்கு அப்பன் நினைவு வரும்படி என்னை அவர்கள் வளர்க்கவே இல்லை. அம்மா, அக்காக்கள் இவர்களைத் தவிர வேறு எந்த உறவும் எனக்குத் தெரியாதபடி உள்ளங்கைக்குள் வைத்து வளர்த்தார்கள். என் அப்பன் இடத்தில் என் தாய் மாமா இருந்தார். என்னை அவர் மிகச்சரியானவனாக வளர்த்தார். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கினை அவர் கற்றுக் கொடுத்தார். அதன் பிரதிபலன் நான் இப்போது செய்யும் செயல்களில் மிளிரும். எனது எந்தச் செயல்களானாலும் சரி என் சிந்தனையும், செயலும் அவரைப் போன்றே இருக்கும். 

அது மட்டுமல்ல அவர் எனக்கு கொடுத்தது அவரின் ஹை பிளட் பிரஷரையும் கூடத்தான். பத்து வருடங்களுக்கு முன்பு பி.எஸ்.ஜி ஹாஸ்பிட்டலில் பிரஷர் அதிகமாகி பெட்டில் இருந்த போது டாக்டர் என்னிடம், ”உங்கள் தாய்மாமாவுக்கு  பிரஷர் இருக்கிறதா?” என்று கேட்ட போதுதான் எனக்கு இது மாமன் வழியே  டி.என்.ஏ கொண்டு வரும் சீர் எனப் புரிந்தது.

என்னைப் பொறுத்தவரை என் வாழ்க்கை என்பது யாராலோ ஒழுங்குச் செய்யப்பட்டு நடத்தப்படுகிறதோ என்று எனக்கு அடிக்கடித் தோன்றும். அதற்கு பல காரணங்களும் உண்டு. 

கரூரில் ஒரு ஜோசியக்காரர் ”இன்னும் பத்தே நாளில் நீ யாரோ ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டியிருப்பாய்” என்றார். “போய்யா, நீயும் உன் ஜோசியமும்” என்றுச் சொல்லி விட்டு வந்தேன். பத்தாம் நாளில் நான் கணவனானேன். 

இப்படித்தான் கடந்த வாரம் சிங்காநல்லூர் காய்கறி மார்க்கெட்டுக்குச் சென்று திரும்பிய போது ”ஏன் இன்னும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரவில்லை என்று யாரோ காதில் சொன்னது போலத் தோன்றியது. அவங்களும் திடீரென பீளமேடு  கோவிலுக்குப் போய் வரலாமா?” என்று கேட்க திடுக்கிட்டது. 

கோவிலுக்குச் சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தேன். கூட்டமாக பீளமேடு ஆஞ்சநேயரைத் தரிசித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு அவரின் தலை மட்டுமே தெரிந்தது. முழுமையுமாக பார்க்கணுமே என நினைத்தேன். அங்கிருந்த அர்ச்சகர் மைக்கை எடுத்து, “பகவானின் காலடியில் அமர்ந்து பிரார்த்திப்பதுதான் ஆகச் சரி” எனச் சொல்ல அனைவரும் அமர, ஆஞ்சனேயர் முழு உருவமாக நின்று கொண்டிருந்தார். அசந்தே போனேன்.

இப்படியான வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை தந்தவர் எனது மனைவி. ஒன்றுமற்ற வாழ்வில் வாழ ஒரு காரணமானவராய் அவரிருக்கிறார்.  தேதி பார்க்கவில்லை, ஊரை அழைக்கவில்லை, உற்றாரும் இல்லை, உறவினரும் இல்லை. சடங்குகள் செய்யவில்லை, எந்தச் சம்பிரதாயமும் நடக்கவில்லை. திருமணம் செய்தோம். வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த வாழ்க்கைக்கு ஒரே ஒரு காரணம் அவரே!

இப்பதிவு எழுத வேறொரு காரணம் உண்டு.

எனது உறவினர்களில் ஒருவரின் வாழ்க்கைச் சம்பவம் இது. நல்ல தொழில், நாகரீகம் கலந்த டவுன் வாழ்க்கை. ஒரே பையன் அவர். வீடு, வாசல், செல்வம் அனைத்தும் உண்டு. அவர் உரக்கப் பேசி எவரும் பார்த்ததில்லை. நாசூக்கானவர். இவருக்கு என் உறவுப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். அப்பெண் அக்மார்க் கிராமத்துப் பெண். சொத்து பத்துக்கள் நிறைய இருந்தாலும் அது பற்றிய திமிர்த்தனம் இல்லாதவர். இருவரின் வாழ்க்கையும் சுகமாகச் சென்றது. குழந்தைகள் இருவர். தாலாட்டி, சீராட்டி வளர்த்தனர். இதற்கிடையில் அவர் தன் ஃபாக்டரியில் வேலை செய்த ஒரு பெண்ணுடன் காதல் கொண்டார். அரசல் புரசலாக அனைவருக்கும் தெரிய வர, பெண்ணின் தகப்பனாரும், தாயாரும் பெண்ணை அழைத்துச் சென்று விடலாம் என எண்ணிக் கொண்டிருந்தனர். 

இந்த நேரத்தில் அந்தப் பெண் தன் கணவர் காதல் கொண்ட ஏழைப்பெண்ணுடன் தன் கணவரைத் திருமணம் செய்து வைத்து தன் வீட்டுக்கே அழைத்து வந்து விட்டார். அதிர்ந்தனர் உறவினர்கள். ஆனால் அந்தக் கிராமத்துப் பெண் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. ’அவர் விரும்பினார், கல்யாணம் கட்டி வைத்து விட்டேன்’ என்பதோடு சரி. இரண்டு பெண்களும் ஒரே வீட்டில் தான் வாழ்கின்றனர். இருவருக்கும் குழந்தைகள் இருக்கின்றனர். சண்டை, சச்சரவுகள் இல்லாத வாழ்க்கை. அக்கம்பக்கத்தார்கள் அசந்து போய் கிடக்கின்றனர்.

ஒரு சாதாரண படித்த பெண்ணால் இதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. உடனடி டைவோர்ஸ்தான். விவாகரத்துக்குப் பிறகு முடிவு என்ன? குழந்தைகளுடன் அப்பெண் தனியாளாக நிற்க வேண்டி வரும். அதுமட்டுமா? ஊரார் பேசும் இழிச்சொற்கள் வேறு. எப்படி இருந்தாலும் ஒரு நாள் குழந்தைகள் அப்பனைத் தேடிச் செல்லத்தான் செய்யும். கடைசி வரை தனியாக வாழ்ந்து சீரழிவதை விட சகித்துக் கொள்வதே சரி என்ற அப்பெண் எடுத்து முடிவு குறைந்த காலம் உள்ள வாழ்க்கைக்கு சரியானது.

எல்லாப் பெண்களுக்கும் தன் கணவன் உத்தமன் என்ற நினைப்பிலும், எல்லா ஆண்களுக்கு தன் மனைவி உத்தமி என்ற நினைப்பிலும் தான் இந்த வாழ்க்கையே சென்று கொண்டிருக்கிறது. தற்போதுதான் கிரஸ் என்று பெண்கள் தங்களின் காதல்களை வெளிப்படுத்துகின்றார்கள். ஒரு காலத்தில் பெண்கள் ஆதிக்கம் கொண்ட குடும்பமாக இருந்த வாழ்க்கை, ஆணாதிக்கம் நிறைந்த குடும்பமாக மாறி உள்ளது. காலம் மாற மாற இப்போது மீண்டும் பெண்களின் ஆதிக்கம் நிறைந்த குடும்பமாக மாறிக் கொண்டிருக்கிறது. அது எதிர்காலத்தில் என்னென்ன வெடிகுண்டுகளை வீச இருக்கின்றனவோ தெரியவில்லை.

பெண்மையின் தத்துவம் எப்போதும் தியாகம் கொண்டதாகவே இருக்கின்றது. அவர்கள் எப்போது தியாகத்தன்மையை விட ஆரம்பிக்கின்றார்களோ அப்போது சமூகமும், உலகமும் சீரழிய ஆரம்பித்து விடும்.