குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சொத்துக்குவிப்பு வழக்கு. Show all posts
Showing posts with label சொத்துக்குவிப்பு வழக்கு. Show all posts

Thursday, February 16, 2017

547 பக்கத்தீர்ப்பு ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன் விடுதலையாக சாத்தியமா? ஓர் அலசல்

முதலில் உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். நான் யாருக்கும் ஆதரவாளனும் இல்லை, எதிரியும் இல்லை. தர்ம நியாயங்களை நம்பும் ஒரு சாதாரணன். தர்மத்தின் மீது வெகுவான நம்பிக்கை உள்ளவன். ஆகவே இதை மனதில் வைத்துக் கொண்டு படியுங்கள்.

நேற்று விடிகாலைப் பொழுது 3 மணியிலிருந்து சுப்ரீம் கோர்ட் சசிகலா சொத்துக்குவிப்பு விவகாரத்தில் வழங்கிய தீர்ப்பினை வாசிக்க ஆரம்பித்தேன். தமிழகத்தின் வரலாற்றில் முக்கியமான ஒரு தலைவரை குற்றவாளி எனக் குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு அது. குன்ஹா அவர்களின் தீர்ப்பினையும் படித்துள்ளேன். குமாரசாமி அவர்களின் தீர்ப்பினையும் படித்திருக்கிறேன். அந்த வகையில் இந்தத் தீர்ப்பு என் கவனத்தை பெரிதும் கவர்ந்தது.

ஜெயலலிதா மறைந்து விட்டார். ஆனாலும் அவரின் வரலாற்றில் அந்தக்கறை படிந்து இருக்கும். இனி அவருக்காக கோர்ட்டில் எவரும் வாதாடப்போவதில்லை. யாரும் அவரை நினைத்துக் கூடப்பார்க்க மாட்டார்கள். அரசியல் களம் அப்படித்தான் இருக்கும்.

மிகப் பெரிய பெண் போராளி அவர். ஆட்சி நடத்திய விதம் சர்ச்சைகளுக்கு உட்பட்டதாக இருக்கலாம். இதற்காக அவர் மீது ‘மட்டும்’ குற்றம் சுமத்திட முடியாது. “பாம்பு தின்னும் ஊருக்கு வாழச் சென்றால் பாம்பின் தலையையும், வாலையையும் தின்னாமல் நடுத்துண்டை சாப்பிட்டு வாழலாம்” என்றொரு சொல் வழக்கை கேள்விப்பட்டிருப்பீர்கள். சில பாம்புகளுக்கு தலையில் விஷம் இருக்கும். சில பாம்புகளுக்கு வாலில் விஷம் இருக்குமென்பதால் நடுத்துண்டே பாதுகாப்பானது. அவர் அதைத்தான் செய்தார். அரசு அமைப்பின் சிஸ்டம் அப்படி இருக்கிறது. மன்னர் காலத்திலிருந்து ஜன நாயக ஆட்சி வரை ஊழலும், சிபாரிசும், அதிகார துஷ்பிரயோகங்களும் வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகின்றன.

நாட்டையும், நாட்டு மக்களையும் திருத்த முடியாது. எத்தனையோ கடவுள்கள் இருக்கின்றார்கள். எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. இருந்தும் என்ன பலன்? எவராவது திருந்தினார்களா? கோவிலுக்குச் செல்பவனும், பிற மத இடங்களுக்குச் சென்று வருபவனும் தான் குற்றச்செயல்களைச் செய்கின்றார்கள். மனம் கூசாமல் கொலைகளைச் செய்கின்றார்கள். 

இதையெல்லாம் தெரிந்து கொண்டதனால் அவர் தனக்கான வழியைத் தேர்ந்தெடுத்தார். ஜெயலலிதா தனிமையாக வாழ முடியாது. கலைஞருக்கு குடும்பம் இருக்கிறது. அவர்கள் அவரைப் பாதுகாத்தார்கள். ஆனால் ஜெயலலிதாவுக்கு மாற்று வழி தெரியவில்லை. மாற்று வழி இருந்தாலும் அவருக்கு உகந்தவர்களாக மன்னை ஆட்கள் இருந்தார்கள். கூட வைத்துக் கொண்டார். எதுவும் தவறில்லை. கலைஞர் தன் குடும்ப உறுப்பினர்களால் பத்தாண்டுகள் ஆட்சியையே இழக்கவில்லையா? அது போல்தான் இதுவும்.

மன்னர் ஆட்சியும் ஜன நாயக ஆட்சியும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றுதான். மன்னராட்சியில் மன்னர் குடும்பத்தினர் ஆட்சிக்கு வருவார்கள். மக்களின் கருத்துக்கள் கேட்கப்படாது. ஜனநாயக ஆட்சியில் மீடியா திருட்டுக்கூட்டத்தினால் மக்களின் மூளைச் சலவை செய்யப்பட்டு யார் தேர்வாக வேண்டுமென்று தயார் செய்யப்படுத்தப்படுவார்கள். ஓட்டு அதிகாரம் இருப்பதாக கற்பனையாக கதை கட்டி அதையும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வார்கள். இது ஜனநாயக ஆட்சி. இரண்டுக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை. 

ஜெயலலிதா நல்லவராகவே இருந்தாலும் அரசியல் அப்படி இருக்க விடாது. அரசியல் என்றாலே உங்களுக்கு சகுனிகளும், சாணக்கியன்களும் நினைவுக்கு வந்து விட வேண்டும். சாணக்கியன் தான் கொண்ட சபதத்தினை மக்கள் நலனை முன்னிறுத்தி மன்னருக்காக மக்கள், மக்களுக்காக மன்னர் என்ற அர்த்தசாஸ்திரத்தை உருவாக்கினான். சகுனியோ சுய நலம் ஒன்றினையே குறிக்கோளாய் கொண்டவன். இந்தப் பாரத பூமியில் சகுனிகளும், சாணக்கியன்களும் தங்களுக்குள்ளே ஆடும் பகடை தான் அரசியல். இப்படிப்பட்ட அரசியலில் நல்லவர்களுக்கு இடமேது? நல்ல எண்ணம் கொண்டவர்களுக்கு இடம் நிச்சயம் இருக்கவே இருக்காது.

அவர் தனிப்பட்ட முறையில் மனிதாபிமானவர். மனிதர்களுக்கு இருக்கும் குணம் தான். எல்லாம் கிடைத்தும் எதுவும் கிடைக்காத வாழ்க்கை அவரது. அழகு, படிப்பு, அறிவு, பதவி, அதிகாரம், புகழ் அனைத்தும் அவருக்குக் கிடைத்தன. ஆனால் வாழ்க்கை? எதுவும் காரணமின்றி அமையாது. அந்த ஆராய்ச்சியை செய்யத்துவங்கினால் அது பெரும் வரலாறாக மாறிப்போகும். ஆகவே விட்டு விடுவோம்.

மீண்டும் வழக்கு விபரத்துக்கு வந்து விடுகிறேன்.

ஒவ்வொரு தீர்ப்பு வழங்க்கபடும்போது, அந்தத் தீர்ப்பில் வழக்கு விபரங்கள், வாதிகள் தரப்பு வாதம், பிரதிவாதிகளின் வாதம், சாட்சி ஆவணங்கள் போன்றவற்றுடன் தீர்ப்பு வழங்க ஏதுவாக இது போன்ற வழக்குகளில் முன்பு வழங்கப்பட்ட தீர்ப்புகள் என விவரித்து இறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும். அவ்வாறு வழக்குகளின் தீர்ப்பின் ஊடே மேற்கோள் காட்டப்பட்டுள்ள தீர்ப்புகள் ஆகியவைகளைப் படித்து வெகு முக்கியமான பாயிண்ட் என்றால் கணிணியில் சேமித்து வைத்துக் கொள்வேன். நானொன்றும் வக்கீலுக்குப் படிக்கவில்லை. வக்கீலுக்குப் படித்தால் தான் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. ஆர்வம் மட்டுமே. ஆகவே சட்ட புத்தகங்களை படிப்பதும், நீதிமன்றத்தீர்ப்புகளை வாசிப்பதும் எனது வாடிக்கையாகவே வைத்திருக்கிறேன். அந்த வகையில் இந்த தீர்ப்பினையும் வாசிக்க ஆரம்பித்தேன்.

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பினைப் படிக்கவோ அல்லது பார்க்கவோ விரும்புகின்றீர்களா? கீழே இருக்கும் இணைப்பினைக் கிளிக் செய்யுங்கள்.

http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=44563

இந்தத் தீர்ப்பின் மொத்தப்பக்கங்கள் 547. இதில் பாயிண்டுகள் தான் வழக்கு விபரங்களை விவரித்துச் செல்லும். 154வது பாயிண்டிலிருந்து 239 பாயிண்ட் வரை பல தரப்பட்ட வழக்குகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த நால்வரின் மீதான குற்றங்களின் சட்டம் என்ன சொல்கிறது என்று விவரிக்கப்பட்டுள்ளன. 1991லிருந்து 1996 வரை அவர்கள் சேர்த்த சொத்துக்கள் அதன் உண்மை மதிப்புகள் வரிசையிடப்பட்டிருக்கின்றன. ஊழல், கரப்ஷன் போன்ற விசயங்கள் அலசப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சொத்துக்கும் விவரங்களும் அதற்கான விளக்கங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அக்யூஸ்டு ஏ1 - ஜெயலலிதா முதல் ஏ4-இளவரசி வரை குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. கணக்குகள் மிகச்சரியாக கணக்கிடப்பட்டிருக்கின்றன. கோர்ட்டு வழக்கு ஆவணங்கள், சாட்சிகள் இவைகளைக் கொண்டு யார் குற்றவாளி என்று தீர்ப்பு கொடுக்கும் வழக்கப்படி சட்டப்படி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் மூவரும் விடுதலையடைய வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்று சொல்லி விடேன் ஏன் இத்தனை இழுப்பு என்று நீங்கள் கேட்கின்றீர்கள். அதற்கு முன்னால் ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன்.

”பல குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது” என்கிறது நம் இந்திய அரசியலமைப்புச் சட்டம்.  அதைத்தான் இவ்விடத்தில் சொல்ல விரும்புகிறேன்.

கவனிக்க “பல குற்றவாளிகள் தப்பினாலும்”.

இதற்கு நம் சட்டமைப்பு இடம் கொடுக்கிறது என்பது முரண்பாடு. முரண்பாட்டில் கூட ஒரு நல்ல விசயம் என்னவென்றால் நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதுதான். 

இவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழி இருக்கிறது. அது வெகு எளிதானதுதான். மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொள்ள வேண்டியதில்லை. சட்டப் புத்தகங்களை பிரித்துப் படித்து மூளையை கடைய வேண்டியதில்லை. நம் நீதிமன்றத் தீர்ப்புக்கள் அதற்கான வழியைத் தருகின்றன. அந்த நம்பிக்கையில் தான் வழி இருக்கிறது என்கிறேன். கீழமை நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு, மேல்முறையீட்டில் ஒரு தீர்ப்பு. உச்ச நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு என்றெல்லாம் நாம் படித்து வருகிறோம். (மறக்காமல் படிக்கவும் இந்தியாவின் அசைக்க முடியாதவர்கள் )

ஆகவே இதுகாறும் ஊழல் வழக்குகளில் விடுதலை செய்து வழங்கப்பட்ட தீர்ப்புகள், இன்கம்டாக்ஸ் மற்றும் பொருளாதார குற்ற வழக்குகளில் விடுதலை செய்து வழங்கப்பட்ட தீர்ப்புகளைப் படித்தால் இவர்களின் விடுதலைக்கு சட்டப்படியான தீர்வுகள் நிச்சயம் கிடைக்கும் வாய்ப்புகளும், சாத்தியக்கூறுகளும் இருக்கலாம். ஆனாலும் இந்தத் தீர்ப்பு தகுந்த ஆதாரங்களைக் கொண்டு வெகு சுத்தமாக வழங்கப்பட்டிருக்கிறது. 

இதை உடைக்க அதீதப் புத்திசாலியால் தான் இயலும். அந்தப் புத்திசாலி வக்கீல் யார் என்று அறிவதில் தான் எனக்கு ஆர்வம் அதிகமிருக்கிறது. சட்டத்தின் ஊடே விளையாடுவது என்பது மாபெரும் சாகசக்கலை. அதில் தர்மம் இருக்க வேண்டுமென்பது எனது ஆசை.